
1971 - ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.
தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,
”ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ”ரஷ்ய மை” வைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட காமராஜர்,
”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” - என்றார்.
முதலமைச்சர் ஆனதும் காமராஜர் பேசிய பேச்சில் ,
” நான் ஏழைகளின் துயர் நீக்கவே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்கு இடமில்லை என்றால் எனக்கு இப்பதவி தேவை இல்லை.” என்றார்.
ஏழையாகப் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் ஏழைகளின் துயரங்களை நீக்கவே எண்ணிப் பாடுபட்ட காமராஜரை ”ஏழைப் பங்காளன்” என்று சொல்வதிலே தவறில்லை தானே.
அப்போது காமராஜர் பதவியில் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது.
அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.
”பார்க்க முடியாதுன்னேன்” - என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.
அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.
இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது.
